வாக்குறுதிகளை ஏற்காததால் மக்களிடம் எடுபடாத அதிமுக பிரசாரம்

சிவகங்கை, மார்ச் 24: சிவகங்கை மாவட்டத்தில் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவும், ஒரு தொகுதியில் பிஜேபியும் போட்டியிடுகிறது. ஆனால் எந்த தொகுதியிலும் வேட்பாளர் அறிவிப்பிற்கு கட்சியினரிடையே வரவேற்பு இல்லை. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்த பாஸ்கரனுக்கு சீட் மறுக்கப்பட்டதால் புகைச்சல் கிளம்பிய நிலையில் உள்குத்து வேலைகளும் தொடங்கின.

வேட்பு மனுத்தாக்கல் செய்யும் கடைசி நாள் வரை வேட்பாளர் மாற்றம் இருக்கலாம் என கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் வேட்பாளர்கள் யாரும் மாற்றப்படவில்லை. இதனால் கட்சியினர் சோர்ந்து போக, வேட்பாளர்கள் இனி நம்மை மாற்ற முடியாது என நிம்மதி பெரு மூச்சு விட்டனர். திமுக கூட்டணி பிரசாரம் கடந்த ஜனவரியில் தொடங்கியது. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி விடியலை நோக்கி என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்தார்.

பிப்ரவரியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சி மற்றும் கடந்த 18ம் தேதியும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். தொடர்ந்து திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இதுவரை முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் யாரும் பிரசாரத்திற்கு வரவில்லை. இம்மாவட்டத்தை சேர்ந்த அமைச்சருக்கு போட்டியிட சீட்டே கொடுக்கவில்லை. மற்ற மாவட்ட அமைச்சர்களும் அவரவர் தொகுதியை பார்ப்பதிலேயே பல்வேறு பிரச்சினைகள் உள்ளதால் சிவகங்கை மாவட்டத்திற்கு வரவில்லை. வேறு நட்சத்திர பேச்சாளர்களும் இதுவரை வரவில்லை என்பதால் வேட்பாளர்கள் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றனர். 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கொடுக்கும் வாக்குறுதிகளை மக்கள் ஏற்காததால் பிரசாரம் சுத்தமாக எடுபட வில்லை. பிரசாரம் முடிவடைய இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரசாரம் சுத்தமாக எடுபடாததாலும், உரிய வழிகாட்டுதல் இல்லாததாலும் அதிமுக வேட்பாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் விழி பிதுங்கி வருகின்றனர்.

அதிமுகவினர் கூறியதாவது, ‘மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் யாருடனும் கட்சியினரே முழுமையாக இணைந்து பணியாற்றவில்லை. நிர்வாகிகள் பலர் ஒதுங்கியுள்ளனர். பலமான கூட்டணி கட்சிகளும் இல்லை. இந்நிலையில் பிரசாரமும் எடுபடாததால் என்ன செய்வதென்று தெரியாமல் இனி யாரையும் நம்பி பயனில்லை. நாம் மட்டுமே பிரசாரம் செய்வோம். நடப்பது நடக்கட்டும் என்ற நிலைக்கு வந்து விட்டனர் என்றனர்.

Related Stories: