காலையில திமுக, மாலையில் அதிமுக மைக்செட் தட்டுப்பாட்டால் மாறி, மாறி பாடல் ஒலிபரப்பு திருமங்கலம் தொகுதியில்தான் இந்த பிரசாரம்

திருமங்கலம், மார்ச் 24: திருமங்கலம் தொகுதி கிராமங்களில் மைக்செட் தட்டுப்பாட்டால் பாடல்களை மாற்றி, மாற்றி ஒலிபரப்பி பிரசாரம் செய்து வருகின்றனர். திருமங்கலம் தொகுதியில் முக்கிய அரசியல் கட்சியினர் பிரசாரத்தை துவக்கியுள்ளனர். இந்த தொகுதியில் உள்ள 3 ஒன்றியங்களில் நகரம் முதல் குக்கிராமங்கள் வரையில் வேட்பாளர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்து வாக்குகள் கேட்டு வருகின்றனர். வேட்பாளர்களின் பிரசாரத்தை முன்கூட்டிய தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சியினரும் கிராமங்களில் மைக்செட்டுகளை போட்டு வேட்பாளர்கள் வருவதை தெரிவிக்கின்றனர். இதில் கிராம பகுதிகளில் மைக்செட்காரர்கள் நூதனமான முறையை கையாண்டு வருகின்றன. காலையில் ஒரு அரசியல்கட்சி உதாரணமாக திமுக வேட்பாளர் பிரசாரம் செய்யும் போது அந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் பாடல்களை ஒலிபரப்புக்கின்றனர். அவர் பிரசாரம் செய்து சென்ற பின்பு மைக்செட் கழற்றாமல் அப்படியே மதியம் அல்லது இரவு வேளையில் வரும் அதிமுக வேட்பாளருக்கு அதே இடத்தில் அதே மைக்செட்டில் பிரசார பாடல்களை போட்டு அலறவிடுகின்றனர். இதுகுறித்து கட்சியினரிடம் கேட்ட போது, ‘என்ன செய்வது குக்கிராமங்களில் மைக்செட் அமைப்பாளர்கள் கிடைப்பது அரிது. தற்போது தேர்தல் நெருங்கிவரும் வேளையில் அடுத்தடுத்து அனைத்து கட்சியினரும் பிரசாரங்களுக்கு வருகின்றனர். எனவே காலையில் போடப்பட்ட அதே மைக்செட்டில் பிரசார பாடல்களை மட்டும் மாற்றி ஒலிபரப்பி பிரசாரத்தை நடத்தி வருகிறோம்’ என்றனர். மைக்செட் அமைப்பாளர்கள் கூறுகையில், ‘பிரசார பாடல்களை மாற்றி போடுவதால் எங்களுக்கும் அலைச்சல் குறைகிறது. கிராமத்தில் ஒரே இடத்தில் மைக்செட் கட்டப்பட்டுள்ளதால் பிரச்னைகள் ஏற்பட வாய்புகள் இல்லை’ என்றனர்.

Related Stories: