பழநி அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் கோயில் நிர்வாகம் நடவடிக்கை

பழநி, மார்ச் 24: பழநி அடிவாரத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முதன்மை திருவிழா பங்குனி உத்திரம். இவ்விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 27ம் தேதியும், தேரோட்டம் 28ம் தேதியும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்டம் அடிவாரத்தில் உள்ள கிரிவீதியில் நடைபெறும். இக்கிரிவீதியில் உள்ள கடைகள் சாலைவரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன.

இதனால் தீர்த்தக்காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள், அலகு குத்திச் செல்லும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தேரோட்டம் நடைபெறுவதிலும் இடைஞ்சல் உண்டாகும் சூழல் நிலவியது. இதனால் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பல கடைக்காரர்கள் தாங்களாகவே தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.

மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கோயில் அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர்.

Related Stories: