×

குடும்பத்தகராறில் விபரீதம் கிணற்றில் மகளுடன் குதித்த தாய் மீட்பு: மகள் பரிதாப பலி

திண்டிவனம், ஏப். 23: மயிலம் அருகே தற்கொலை செய்து கொள்ள மகளுடன் கிணற்றில் குதித்த தாய் மீட்கப்பட்டார். குழந்தை பரிதாபமாக இறந்தது.  விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் மனைவி தேவதேவி(31). இவர்களுக்கு மதுமிதா (8), யோக (6) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தேவதேவிக்கும் அவரது கணவர் மோகன் (38), மற்றும் அவர் குடும்பத்தாருக்கும் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து மயிலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை இருவருக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  பின்னர் வீட்டில் இருந்து சென்று இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் தேவதேவி. இதனால் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் 2ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் யோகயை, தேவதேவி கையில் தூக்கிக் கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். அப்போது அலறல் சத்தம் கேட்ட கிராம மக்கள் கிணற்றில் குதித்து தேவதேவியை உயிருடன் மீட்டனர். ஆனால் பெண் குழந்தை யோக கிணற்றில் மூழ்கி மாயமானார். இந்த சம் பவம் குறித்து திண்டிவனம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
 அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பெண் குழந்தையை கிணற்றிலிருந்து இறந்த நிலையில் மீட்டனர். குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு