திருச்சி, ஏப்.20: திருச்சி பொன்மலையில் ரயில்வே மருத்துவமனை உள்ளது. இங்கு ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலால் பாதிக்கப்படும் ரயில்வே ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொரோனா சிகிச்சை வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுபாடு காரணமாக ரயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு நுழைவு கேட்டில் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணத்தால் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என மருத்துவமனை நிர்வாகம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.