×

தஞ்சையில் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா செயல்படவில்லை

தஞ்சை, ஏப்.20: தஞ்சையில் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என மூன்று தொகுதி திமுக வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்.6ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வரும் மே 2ம் தேதி வெளியாகும் நிலையில், பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம், சிசிடிவி கேமராக்கள் செயலிழிப்பு போன்ற பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக திமுகவினர் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

அதன்படி தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு தொகுதியில் 5,91,346 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூன்று அடுக்கு பாதுகாப்பில், தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைகல்லுாரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கு நுழைவு வாயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. அனுமதிக்கப்பட்டாத நபர்கள் வருவதாக கூறி, நேற்று மதியம் 12.30 மணிக்கு தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏவும் வேட்பாளருமான டிகேஜி. நீலமேகம், திருவையாறு தொகுதி எம்எல்ஏவும் வேட்பாளருமான துரை.சந்திரசேகரன், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவும் வேட்பாளருமான ராமச்சந்திரன் ஆகியோர் சிசிடிவி கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என பார்வையிட்டனர்.

அப்போது, தாசில்தார்கள் (தஞ்சாவூர்) பாலசுப்பிரமணியன், (திருவையாறு) நெடுஞ்செழியன், (ஒரத்தநாடு) அருணகிரி ஆகியோரிடம், நுழைவு வாயிலில் புதிதாக 360 டிகிரி கோணத்தில் சுழலும் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என கூறினர். மேலும், மாவட்ட கலெக்டர் கோவிந்தராவிடமும் செல்போன் பேசி தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தனர். இதுகுறித்து துரை.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது: கல்லூரி நுழைவு வாயிலில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை. அதை உடனே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி தற்போது தேர்தல் கமிஷன் கட்டுபாட்டில் முழுயைாக உள்ள நிலையில், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் வெளிநபர்கள் அடிக்கடி வந்து செல்லுகின்றனர். அவர்கள் வர தடை விதிக்க வேண்டும். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கல்லூரி வளாகத்தில் 5 டிஷ் ஆண்டனா வைக்கப்பட்டுள்ளது, அதனை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

Tags : Tanjore ,
× RELATED தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 2வது நாளாக வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை