புதுக்கோட்டை, ஏப். 20: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் நரிக்குறவமக்கள் வியாபாரம் இன்றி வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் அருகே உள்ள கிள்ளுக்கோட்டை சாலை மற்றும் புதுக்கோட்டை அருகே உள்ள ரெங்கம்மாள் சத்திரம் மற்றும் கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் பகுதியில் நரிக்குறவர் மக்கள் சுமார் 150 வீடுகளில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பிழைப்பிற்காக பாசி, மணி தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் வங்கிகளிடமும், தனியாரிடமும் வட்டிக்கு பணம் வாங்கி விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வாங்கி கோயில் திருவிழாக்களில் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஊரடங்கின்போது திருவிழாக்கள், பேருந்து நிலையங்களில் விற்பனை இல்லாத நிலை ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பேருந்து நிலையங்களில் இவர்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கி கொள்முதல் செய்த பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை விற்க முடியாமல் வீடுகளில் போட்டு தேங்கியுள்ளது. இதனால் பிழைப்புக்க அடுத்து என்ற செய்வதென்று தெரியாமல் பெரும் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். எனவே வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் அன்றாட குடும்பச் செலவுகளுக்கே தடுமாறி வருகின்றனர்.இதுகுறித்து நரிக்குறவ சமூகத்தினர் கூறும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் எங்கள் உறவினர்ள் வாழ்ந்து வருகின்றனர்.
அனைத்து ஊர்களிலும் சுமார் ஆயிரம் பேர் நரிக்குறவர் மக்கள் திருவிழாக்களில் பாசி, மணி, ஊசி, விளையாட்டு பொருட்கள், பொம்மைகள் விற்பனை செய்கிறோம். பொருள் வாங்க வட்டிக்கு கடன் வாங்குவோம். திருவிழா முடிந்த பிறகு கடனை வட்டியோடு திருப்பி கொடுப்போம். ஆனால் கஜா புயலுக்கு பிறகு கொரோனா வந்து கடந்த 2 வருடமாக எங்கள் வாழ்வாதாரம் முடங்கிப் போய் உள்ளதாகவேதனையோடு தெரிவித்தனர். இந்த வருடம் திருவிழா நடக்கும் என்று மறுபடியும் கடன் வாங்கி பொருள் வாங்கி வந்து ஒவ்வொரு வீட்டிலும் மூட்டை மூட்டையாக உள்ளது. ஆனால் வியாபாரம் ஆகாததால் கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் சூழலில் குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்கக்கூட தங்களிடம் பணம் இல்லை. அரசு வழங்கு ரேசன் அரிசியை சாப்பிட்டு உயிர் வாழ்கிறோம். அதனால சிறு தொழில் செய்யும் தங்களுக்கும் அரசு கொரோனா ஊரடங்கால் தங்களின் வாழ்வாதாரமும் முடங்கி உள்ளதைக் கருத்தில் கொண்டு ஏதேனும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.