கணக்கெடுப்போடு நின்ற விரிவாக்க திட்டம் கிராமங்களுக்கு வராத காவிரி குடிநீர் காலிக்குடங்களுடன் அலையும் மக்கள்

சிவகங்கை, ஏப்.20: சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தும் பணி தொடங்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்பகுதிகள் பயனடைந்து வருகின்றன. தொடர்ந்து 2011ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சி, திருப்பத்தூர், இளையான்குடி, திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் காளையார்கோவில் அருகில் உள்ள கிராமப்பகுதிகள் இணைக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் சில பகுதிகள் மட்டும் இணைக்கப்பட்டன. ஆனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பல்வேறு பகுதிகள் இணைக்கப்படவில்லை. மீண்டும் கடந்த 2013ம் ஆண்டு திருப்புவனம், மானாமதுரை, சிவகங்கை தாலுகாவிற்கு உட்பட்ட மதகுபட்டி, ஒக்கூர், தமறாக்கி, மேலப்பூங்குடி, வீரபட்டி திருமலை பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட கணக்கெடுப்பு செய்து திட்ட மதிப்பீடும் அரசுக்கு அனுப்பப்பட்டது. இதற்காக ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு பணி முடிந்து அடுத்தகட்ட பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மெயின் பைப் லைன் திருப்பத்தூர், கல்லல், காளையார்கோவில், மறவமங்கலம், இளையான்குடி வழியாக ராமநாதபுரம் செல்கிறது. இதேபோல் காளையார்கோவிலில் இருந்து கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை வழியே பைப் லைன் அமைக்கப்பட்டு சிவகங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மெயின் பைப் லைன் செல்லும் வழியில் உள்ள ஊர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படவில்லை. இதுபோல் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சனையுள்ள ஏராளமான கிராமங்கள் விடுபட்டுள்ளன.

குடிநீர் பிரச்சனையால் பாதிக்கப்படும் அனைத்து ஊர்கள் மற்றும் அனைத்து ஊராட்சிகளையும் இத்திட்டத்தில் இணைத்து விரிவாக்க பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் மீண்டும் கடந்த பிப்ரவரியில் விரிவாக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போதாவது முழுமையாக விரிவாக்கப் பணிகளை செய்ய வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் கூறுகையில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் அதன்பிறகு இத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் குடிநீர் பிரச்சனை உள்ளது. ஆனால் கணக்கெடுப்பு பணி முடிந்து அடுத்தகட்ட பணிகள் எதுவும் தொடங்காமல் இருந்தனர். நகராட்சிகள் மற்றும் சில கிராமங்களை தவிர மற்ற கிராமங்களுக்கு வேறு குடிநீர் திட்டங்கள் இல்லை. இதனால் கோடை காலங்களில் கடும் குடிநீர் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக குடிநீர் இணைப்பிற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றனர். 

Related Stories: