நாகையில் மாங்காய் சீசன் துவங்கியது வியாபாரிகள் வராததால் விவசாயிகள் ஏமாற்றம்

நாகை, ஏப்.20: நாகையில் மாங்காய் சீசன் துவங்கியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நாகை மாவட்டத்தில் காமேஷ்வரம், விழுந்தமாவடி, தெற்கு பொய்கைநல்லூர், பிரதாபராமபுரம், காமேஸ்வரம், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் ருமேனியா, பங்கனப்பள்ளி, ஒட்டுநீலம், செந்தூரா உள்ளிட்ட மாங்காய் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்து தற்பொழுது பழுக்கும் நிலைக்கு வந்துள்ளது.

இந்த பகுதிகளில் இருந்து கிடைக்கும் மாம்பழங்களுக்கு என்று தனி விலை உள்ளது. அந்த அளவிற்கு ருசி நிறைந்தவையாக இருக்கும். மாங்காய்கள் காய்க்க தொடங்கியவுடனே வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாமரம் இருக்கும் விவசாயிகளின் வீட்டிற்கு வந்து விலையை நிர்ணயம் செய்து அதற்குரிய முன் தொகையை செலுத்தி விட்டு சென்றுவிடுவார்கள். ஆனால் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் கொரானா பரவல் காரணமாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு வாங்கி செல்ல வியாபாரிகள் வரவில்லை.

இதனால் மாங்காய் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலை போகிறது. காய்கள் காய்க்கும் போது போட்டி போட்டிக்கொண்டு விலை நிர்ணயம் செய்த காலம் போய் பழமாக மாறும் காலம் வந்தும் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories: