×

கரூரில் பள்ளி சுற்றுச்சுவர் அருகே பாதுகாப்பின்றி திறந்த நிலையில் வடிகால்

கரூர், ஏப்.20: கரூரில் குறுகிய சாலையிலுள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகே திறந்த நிலையில் உள்ள வடிகாலால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதால் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் இருந்து ஐந்து ரோடு, நெரூர், புலியூர், சோமூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் மார்க்கெட் வளாகத்தை ஒட்டியுள்ள உதவி பெறும் பள்ளியின் வழியாக அனைத்து பஸ்களும் சென்று வருகின்றனர். குறிப்பிட்ட தூரம் வரை சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி இந்த பகுதியில் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

மேலும், பள்ளியின் சுற்றுச்சுவரை ஒட்டி செல்லும் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ளதாலும், இரண்டு சக்கர வாகனங்கள் ஒதுங்க முடியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, திறந்த நிலையில் உள்ள வாய்க்காலை சிலாப் கொண்டு மூடி வாகன போக்குவரத்து எளிதாக நடைபெற ஆவண செய்ய வேண்டும் என வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குறுகிய சாலையை பார்வையிட்டு தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

Tags : Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...