சென்னை: முதல் திருமணத்தை மறைத்து காதலித்து வந்த சின்னத்திரை நடிகையிடம் தகராறு செய்த உதவி இயக்குனருக்கு அடி உதை விழுந்தது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மணலி பல்ஜிபாளையம் அப்பாராஜ் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெனிபர் (24). சின்னத்திரை நடிகை. இவரும், வண்டலூரை சேர்ந்த சின்னத்திரை உதவி இயக்குனர் நவீன்குமார் (25) என்பவரும் கடந்த 4 மாதமாக காதலித்து வந்துள்ளனர். ஜெனிபருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சரவணன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் நவீன்குமாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, முதல் திருமணத்தை என்னிடம் மறைத்தது ஏன், என ஜெனிபரிடம் நவீன்குமார் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதனால், ஜெனிபர் சில நாட்கள் நவீன்குமாரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சமரசம் பேசுவதற்காக ஜெனிபர் வீட்டுக்கு நவீன்குமார் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், நவீன்குமார் அங்கிருந்து புறப்பட்டு, கொடுங்கையூருக்கு சென்றுள்ளார். இதை தொடர்ந்து, கொடுங்கையூர் சென்ற ஜெனிபரின் தந்தை பெரியநாயகம், அவரது மகன் சேவியர், பெரியநாயகத்தின் நண்பர் ஆகியோர் நவீன்குமாரை சந்தித்து மகளின் காதல் விவகாரம் குறித்து கேட்டு தகராறு செய்துள்ளனர்.