வீட்டிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தபோது தாய், பெண் சிசு பரிதாப பலி

புழல்: சோழவரம் அருகே மருத்துவமனைக்கு செல்லாமல் உறவினர்களே பிரசவம் பார்த்ததால் தாயும், சிசுவும் பரிதாபமாக இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோழவரம் அடுத்த புதிய எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில், கோபு என்பவரின் மனைவி பூஜா (20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பாடியநல்லுார் ஆரம்ப சுகதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பூஜா, பயத்தில் கடந்த 18ம் தேதி காலை மருத்துவர்களிடம் தெரிவிக்காமல், அங்கிருந்து வெளியேறி, செங்சூல் சூளைக்கு திரும்பி உள்ளார். வீடு திரும்பிய பூஜாவிற்கு, அன்றைய தினம் இரவு கடுமயைான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மேலும் வலி அதிகரித்து ரத்தப் போக்கு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு செல்லாமல் உடன் இருந்தவர்களே பிரசவம் பார்த்துள்ளனர்.

அவர்கள், முறையான பிரசவ வழிகாட்டுதல்களை பின்பற்றப்படாமல் பிரசவம் பார்த்ததில், பூஜாவும், பிறந்த பெண் சிசுவும் பரிதாபமாக இறந்தனர். இதனை தொடர்ந்து, இறந்தவர்களை யாருக்கும் தெரியாமல் உறவினர்கள் அடக்க செய்ய திட்டமிட்டனர். தகவல் அறிந்த கிராமத்தினர் உடனடியாக சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிரசவத்தின்போது இறந்த தாய் மற்றும் சிசுவின் உடல்களை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 5ஆண்டுகள் ஆன நிலையில் தாய், சேய் இறந்ததால் பொன்னேரி ஆர்டிஓ செல்வம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: