புதுச்சேரி, ஏப். 20: புதுச்சேரியில் மீண்டும் ஊரடங்கு அச்சத்தால் வடமாநில தொழிலாளர்கள் ஊரை காலி செய்து தங்களது சொந்த மாநிலம் திரும்ப ரயிலில் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். நாடு முழுவதும் கடந்தாண்டு கொரோனா தடுப்புக்காக தேசிய ஊரடங்கு அமலானது. அப்போது புதுச்சேரியில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் பல வாரங்கள் பசி, பட்டினியால் அவதிப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்தது. இதனிடையே தற்போது கொரோனா 2ம் அலை வேகமாக பரவுவதால் வடமாநில தொழிலாளர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.