கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு

கிருஷ்ணகிரி, ஏப்.20:  கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க, 9 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையின்  தொடர்ச்சியாக, கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அரசு கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை தவறாது கடைபிடிப்பதை உறுதி செய்யவும், வட்டாட்சியர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் நிலையிலான அலுவலர்கள் கொண்ட 9 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் முகக்கசவம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும், வீட்டிலும் மற்றும் பணி புரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவிட வேண்டும். சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: