மாற்றுத்திறனாளிகள் 30ம் தேதிக்குள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும்

திருச்சி, ஏப்.19: மாற்றுத்திறனாளிகள் 30ம் தேதிக்குள் வாழ்நாள் சான்று அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 40 சதவீதம் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாட்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீதம் அதற்கு மேல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் திருச்சி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து வாழ்நாள் சான்று படிவம் பெற்றோ அல்லது https://tiruchirappalli.nic.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக வாழ்நாள் சான்றினை பதிவிறக்கம் செய்து அதில் கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து (விஏஓ) கையொப்பம் பெற்று உரிய சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணை (0431-2412590) தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Related Stories: