×

மயிலாடுதுறை அடுத்த கருப்பூரில் கொரோனாவால் இறந்தவர் உடலை சுடுகாட்டில் எரிப்பதாக வதந்தி

மயிலாடுதுறை, ஏப்.19: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கருப்பூர் ஊராட்சி திருக்குளம்பியம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (63). உடல்நலக் குறைவால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இவருக்கு கொரோனோ பரிசோதனை செய்ததில் கொரோனோ தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து நாகராஜ் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மயிலாடுதுறை அரசு மருத்துமனையினர் இறந்தவர் உடலை அனுப்பி வைக்கும்போது ஒரு மூட்டை பிளீச்சிங் பவுடர் மற்றும் உடல் கவசப் பைகளை அனுப்பி வைப்பது வாடிக்கை. அதேபோல் இவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் அளிக்கும் போதும் இதே நடைமுறையை பின்பற்றியுள்ளனர்.

திருக்குளம்பியம் மாதா கோவில் பின்புறம் ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டில் அவரது உடலை தகனம் செய்வதற்கான நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டனர். சுடுகாட்டுப்பாதை புதர் மண்டியிருந்ததால் பாதையை இரவு நேரத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் சரிசெய்தனர். கொரோனா பாதுகாப்பு உடை மற்றம் பிளீச்சிங் பவுடரைக் கண்ட கிராம மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு கொரோனா தொற்று ஏற்பட்டவரை புதைப்பதாக பரவிய தகவலால் சுடுகாட்டின் அருகில் குடியிருப்போர் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆடுதுறை-எஸ்.புதூர் சாலையில் அமர்ந்து நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியிருப்பு பகுதி பின்புறம் உள்ள சுடுகாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இச்சம்பவம் அறிந்து பேச்சுவார்த்தைக்கு வந்த குத்தாலம் வருவாய்த் துறையினரை திருப்பி அனுப்பினர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை திருக்குளம்பியத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று மதியம் குத்தாலம் தாசில்தார் இளங்கோவன் ஏடிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த முறை நாகராஜ் உடலை அதே பகுதியில் அடக்கம் செய்ய ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும், சுடுகாட்டை இடமாற்றம் செய்ய மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது.

Tags : Mayiladuthurai ,Corona ,
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...