ஊட்டி,ஏப்.19: கொரோனா இரண்டாவது அலையால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. கடந்த ஆண்டு கெரோனா ஊரடங்கு காரணமாக கோடை சீசன் விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஊட்டியில் சுற்றுலா தொழிலை நம்பி இருந்தவர்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பூங்காக்களும், டிசம்பர் மாதத்தில் படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன. தொடர்ந்து இ-பதிவு முறையில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா தலங்களும் களை கட்டின.
சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சிறு தொழிலாளர்கள், ஓட்டல்கள், காட்டேஜ்கள் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வருவாய் ஈட்ட துவங்கினர். கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட கோடை விழா இம்முறை நடைபெறும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில் கொரோனா தொற்றின் 2வது அலை நாடு முழுவதும் தீவிரமைந்துள்ள நிலையில் தமிழகத்திலும் அதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்ல தடை ஏதுவும் விதிக்கப்படவில்லை.