×

வெவ்வேறு பகுதிகளில் சம்பவம் சிறுவன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலி


செங்கல்பட்டு, ஏப்.19: செங்கல்பட்டு, பெரும்புதூர் பகுதியில் ஒரு பள்ளி மாணவன், 2 கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். செங்கல்பட்டு அனுமந்த புது ஏரியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ஆகாஷ் (19). கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில்  பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். செங்கல்பட்டு அனுமந்த புத்தேரியை சேர்ந்த சிவராஜ். இவரது மகன் ஹிதேந்திரன் (19). செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். அதேபகுதியை  சேர்ந்தவர்  ஹேம்நாத் (19). 3 பேரும் நண்பர்கள். நேற்று மாலை நண்பர்கள் 3 பேரும், 2 பைக்கில் செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி சென்றனர்.  அங்குள்ள விவசாய கிணற்றில், ஜாலியாக அரட்டை அடித்து குளித்தனர். இதில், நீச்சல் தெரியாததால் ஹிதேந்திரன், ஆகாஷ் தண்ணீரில் மூழ்கினர். இவர்கள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அதிர்ச்சியைடந்த ஹேம்நாத் கிணற்றின் வெளியே வந்து அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். கிணற்றில் குதித்து, 2 பேரையும் தேடினர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை.

தகவலறிந்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் இறங்கி, சேற்றில் சிக்கிய 2 வாலிபர்களை சடலமாக மீட்டனர், தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. கூலி தொழிலாளி. இவரது மகன் கஜேந்திரன் (14). அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை கஜேந்திரன், தனது பாட்டி பாட்டி மொட்டையம்மாளுடன், வீட்டின் அருகில் உள்ள குளத்துக்கு சென்றான். அங்கு பாட்டி துணி துவைத்து கொண்டிருந்தபோது, சிறுவன் தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது, திடீரென கஜேந்திரன் தண்ணீரில் மூழ்கி மாயமானான். இதை கண்ட பாட்டி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். தண்ணீரில் மூழ்கிய சிறுவனை தேடி, சடலமாக மீட்டனர்.  தகவலறிந்து சுங்குவார்சத்திரம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...