வருசநாடு, ஏப். 19: கடமலை மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து காணப்படும். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூல வைகை ஆறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தவிர மூல வைகை ஆற்றை நம்பி ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருஷநாடு, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் மூல வைகை ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் மூலம் வைகை ஆற்று நீர் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாத இறுதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை வெயில் காலம் என்பதால் மூல வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படும். அதுபோன்ற நேரங்களில் மூல வைகை ஆற்றில் சாக்கடை கழிவுநீர் குளம் போல தேங்கி காணப்படும். பின்னர் மழை பெய்து நீர் வரத்து ஏற்படும் போது அதனுடன் கழிவுநீரும் சேர்ந்து குடிநீரை மாசுபடுத்துகிறது.