நெல்லை அருகே முன்விரோதத்தில் பயங்கரம் சீவலப்பேரி கோயில் பூசாரி வெட்டிக்கொலை தடுக்க முயன்ற உறவினருக்கும் வெட்டு

நெல்லை, ஏப். 19: பாளையங்கோட்டை அடுத்த சீவலப்பேரி சிவன் ேகாயில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் சிதம்பரம் என்ற துரை (50). இங்குள்ள பிரசித்தி பெற்ற சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் தலைமை பூசாரியாக இருந்து வந்தார். இவரது முன்னோர்களே பல ஆண்டுகளாக பூசாரியாக இருந்து  நிர்வாகத்தை நடத்தி வந்தனராம். இதேபோல் இவர்களது பங்காளிகளும் கோயில் நிர்வாகத்தை சுழற்சி முறையில் நடத்தி வந்தனராம். கடந்த மாதம் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி புதிதாக காம்பவுண்ட் சுவர் கட்டப்பட்டது. மேலும் கோயில் வளாகத்தில் ஒரு கடையை கட்டிய சிதம்பரம் அதில் தனது உறவினர்கள் மூலம் மாலை, சூடன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்தார்.

இதற்கு அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்திடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி கடையை சிதம்பரம் மூடியபோதும் இதன்காரணமாக அவருக்கும், மற்றொரு பிரிவைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் உருவானது. இந்நிலையில் சிதம்பரமும், அவரது வீட்டருகே வசித்து வரும் உறவினரான நடராஜப் பெருமாள் (45) என்பவரும் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் கோயிலில் சுவாமி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள பரிவார தேவதைகளுக்கு பூஜைகள் நடத்தினர். பின்னர் இருவரும் கோயில் சன்னதி முன்பாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென சிதம்பரத்தை அரிவாளால் வெட்ட முயன்றது. இதை கண்டதும் பதறிய சிதம்பரம் உயிர் பிழைத்துக் கொள்ள அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் தொடர்ந்து விரட்டிச் சென்ற கும்பல் அவரை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. அப்போது இதைத் தடுத்த நடராஜ பெருமாளையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிதம்பரம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து தலைதெறிக்க தப்பியோடினர்.

தகவலறிந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த  நடராஜ பெருமாளை, உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தகவலறிந்து விரைந்து வந்த நெல்லை எஸ்பி அலுவலக தலைமையிட ஏடிஎஸ்பிக்கள் சுப்புராஜ், சைபர் க்ரைம் சீமைராஜ், தாழையூத்து டிஎஸ்பி அர்ச்சனா, இன்ஸ்பெக்டர்கள் சீவலப்பேரி (பொறுப்பு) பெருமாள், மானூர் ராமர், தாழையூத்து பத்மநாப பிள்ளை மற்றும் சீவலப்பேரி போலீசார், சிதம்பரம் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.  மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணையை முடுக்கி விட்டனர். கொலை சம்பவத்தையடுத்து சீவலப்பேரி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், ராமர், பத்மநாப பிள்ளை ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தனிப்படையினர், மர்மக்கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனிடையே கொலையான  சிதம்பரத்தின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: