×

பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்


கிருஷ்ணகிரி, ஏப்.19: கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி கிராமத்தில் பூச்சிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற 3ஜி கரைசலை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆம்பூர் பாலாறு விவசாய கல்லூரியில் நான்காம் ஆண்டு இளம் அறிவியல் பயிலும் மாணவர்கள் கிராமங்களுக்கு சென்று தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவத்தில் பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அடுத்த அகசிப்பள்ளி கிராமத்தில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், 3ஜி கரைசல் பயிற்சி அளித்தனர். அப்போது, அவர்கள் கூறுகையில், 3ஜி கரைசலில், பச்சை மிளகாய் 50 கிராம், பூண்டு 50 கிராம், இஞ்சி 50 கிராம் ஆகியவற்றை கலைவையாக்கி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு 10 மி.லி., செறிவு என்ற வீதத்தில், 1 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிப்பதினால் அஸ்வினி பூச்சி, இலைப்பேன் மற்றும் மாவு பூச்சி போன்றவற்றிலிருந்து பயிர்களை பாதுகாக்க முடியும். 3ஜி கரைசல், இயற்கை பூச்சி விரட்டியாகவும், நோய்களிடமிருந்து பயிர்களை பாதுகாக்கவும், மகசூல் பெறவும் பயன்படுகிறது. 3ஜி கரைசலை தெளிப்பான் மூலம் உபயோகிக்கலாம். மேலும் வேளாண்மையில் 3ஜி கரைசலின் நன்மைகள் மற்றும் முக்கியத்தும் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு