கடலூர், ஏப். 19: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 27,624 ஆனது. 30 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் இறந்த நிலையில் இதுவரையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குறைந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாம் அலை காரணமாக மீண்டும் நோய் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனால் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 183 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,624 ஆனது.
நேற்று சிகிச்சை முடிந்து 88 பேர் வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 26 ஆயிரத்து 052 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 897 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 373 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 93 ஆயிரத்து 061 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்துள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் 30 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் வெளியாட்கள் அனுமதி மறுக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. நேற்றைய பாதிப்பில் ஏற்கனவே நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த 110 பேர் அடங்கும். 245 பேரின் பரிசோதனை காத்திருப்பில் உள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் பண்ருட்டியை சேர்ந்த 70 வயது ஆண் மற்றும்் குறிஞ்சிப்பாடி சேர்ந்த 67 வயதுடைய ஆண் இறந்த நிலையில் இதுவரையில் மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 302 ஆனது.