கண்டாச்சிபுரம், ஏப்.19: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தில் விற்பனைக்காக இருந்த இடத்தை பார்க்க வந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பகுதியை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், சிவன், சம்பத், ராஜேந்திரன் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் ஆகியோர் ரியல் எஸ்டேட் சம்பந்தமாக விழுப்புரம் தனியார் ஓட்டலில் பேசி வந்தனர். பிறகு சிவனின் நண்பர் மதுரையை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் கண்டாச்சிபுரம் அருகே மழவந்தாங்கல் கிராமத்தில் விற்பனைக்காக இருந்த நிலத்தை பார்க்க 2 சொகுசு காரில் சென்றனர். இவர்களை பின்தொடர்ந்து வந்த சொகுசு காரில் இருந்த மர்ம கும்பல், சிவன் மற்றும் ராஜேந்திரன் வந்த காரை மடக்கி துப்பாக்கி முனையில் இரண்டு பேரையும் கடத்தி சென்றனர்.