சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், 100 தொலைபேசி இணைப்புகளுடன் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, இணை கமிஷனர் ஆல்பி ஜான் வர்கீஷ், மாநகர நல அதிகாரி டாக்டர் எம்.ஜெகதீசன், மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் வகையில் 100 இணைப்புகளை கொண்ட கட்டுப்பாட்டு மையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் மனநல ஆலோசனை பெற 044-46122300, 044-25384520 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். கடந்த முறை மனநல ஆலோசனை கட்டுப்பாட்டு மையத்துக்கு 4 லட்சம் அழைப்புகள் வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் இந்த ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.