மோட்டார் திருடியவர் மின்சாரம் பாய்ந்து பலி

பெரம்பூர்: கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 5வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ஹேமகுமார் (64). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கட்டுமான பணி நடக்கும் இடத்தை ஹேமகுமார் பார்வையிட சென்றார். அப்போது, அங்கு பொருத்தப்பட்டு இருந்த மின் மோட்டார் அருகே வாலிபர் ஒருவர் மயங்கி கிடந்தார். அவர் அருகில், மின் வயர்கள் கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சேமகுமார், உடனே கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மயங்கி கிடந்தவரை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, மின்சாரம் பாய்ந்து இறந்தவர் மாதவரம் பால்பண்ணை மூலசத்திரம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் (22) என்பதும், இவர் மீது பழைய வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியில் வந்த இவர், கட்டுமான பணி நடக்கும் இடத்தில் உள்ள மின் மோட்டாரை திருட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியவந்தது.

Related Stories: