×

பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு அழுகிய தக்காளி கொட்டுவதால் பசுமை பூங்காவில் சுகாதார சீர்கேடு

ஆவடி, ஏப்.18: ஆவடி, பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு, டன் கணக்கில் அழுகிய தக்காளி கொட்டுவதால், ₹28 கோடி செலவில் அமைக்கப்பட்ட பசுமை பூங்காவில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும், ஏரிக்கு செல்லும் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால், பொதுமக்கள் நோய் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆவடி, பக்தவச்சலபுரத்தில் இருந்து மழைநீர் கால்வாய் பருத்திப்பட்டு ஏரிக்கு செல்கிறது. இந்த கால்வாய் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. மழை காலத்தில் ஆவடி டேங்க் பேக்டரி, ஓ.சி.எப், காந்தி நகர், பக்தவச்சலபுரம், சி.டி.எச் சாலை, கோவில்பாதாகை ஆகிய இடங்களில் இருந்து வரும் தண்ணீர் இந்த கால்வாய் வழியாக தான் சென்று ஏரியில் கலக்கிறது. தற்போது, இந்த கால்வாய் பராமரிப்பின்றியும், பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை காலத்தில் கால்வாயில் தண்ணீர் செல்ல வழியின்றி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கன்னிகாபுரம் பகுதிகளில் புகுந்து விடுகிறது. மேலும், மழைநீர் கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் விடப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குயிருப்புவாசிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பருத்திப்பட்டு ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் 30 முதல் 40 அடி அகலத்தில் இருந்தது. இந்த கால்வாயை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கன்னிகாபுரம் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு 7 அடியாக சுருங்கி விட்டது. இதனால், மழைகாலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. இதனையடுத்து, குடியிருப்புவாசிகள் வீடுகளை காலி செய்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்குகின்றனர். பின்னர், மழைநீர் வற்றிய பிறகு தான் குடியிருப்புவாசிகள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக இதே நிலை தான் மழை காலத்தின் போது நிகழ்கிறது. சில ஆண்டாக கால்வாயை முறையாக பாராமரிக்காமல் உள்ளனர். கால்வாய்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் சிலர் போட்டு விட்டு செல்கின்றனர். இவைகள் குவிந்து தேங்கி நிற்கும் கழிவு நீரில் மக்கி தூர்நாற்றம் வீசுகின்றன. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால், பொதுமக்களுக்கு மலேரியா உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது. ஏரியில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஏரியில் டன் கணக்கில் அழுகிய தக்காளி கொட்டப்பட்டு வருகிறது. இதனால், ஏரி நீர் துர்நாற்றம் வீசுவதுடன், மாசடைந்து வருகிறது. இதனால் பசுமை பூங்காவிற்கு வரும் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றன.
குப்பை கழிவுகள் தேங்கி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்ல முடியவில்லை. மழை காலத்தில் கால்வாயில் செல்ல முடியாததால் கழிவுநீரும், மழைநீரும் கலந்து தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சார்பில் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, ஆவடி மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனித்து பக்தவச்சலபுரத்தில் இருந்து பருத்திப்பட்டு ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாயை பராமரிக்கவும், குப்பை கழிவுகள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.

கால்வாயில் தண்ணீர் செல்ல முடியவில்லை
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “பருத்திப்பட்டு ஏரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ₹28.16 கோடியில் படகு சவாரி, பறவைகள் தங்க மணல் திட்டுகளும் அடங்கிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. இந்த ஏரியில் கலக்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பூங்காவிற்கு வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏரியை முழுமையாக ஆழப்படுத்தாததால், அமைக்கப்பட்ட பசுமை பூங்காவால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியவில்லை. ஏரி மட்டம் உயர்ந்து, கால்வாய் மட்டம் தாழ்வாக உள்ளது. இதனால், ஏரி தண்ணீர் கால்வாயில் திரும்பி வருகிறது. இதனால், கால்வாய் முழுவதும் கழிவுநீரும், ஏரி நீரும் கலந்து தேங்கி நிற்கிறது. திருமலைராஜபுரம், சலவையாளர் குடியிருப்பு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நோய் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏரி முழுவதும் பாழாகி வருகிறது. பல கோடி செலவில் அமைக்கப்பட்ட பூங்காவை மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டு உள்ளது,” என்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...