சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமானத்தில் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.2.9 கோடி மதிப்புடைய 6 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து ஏர்இந்தியா சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். பின்னர், அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது. இதனால், ஏர்இந்தியா ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பயணிகள் அமரும் ஒரு சீட் தூக்கிக்கொண்டு உயர்ந்திருந்தது. அதை சரிசெய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து சீட்டிற்கு அடியில் பார்த்தபோது, வெள்ளை நிற பார்சல் ஒன்று இருந்தது. இதையடுத்து சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு விமானநிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விமான பாதுகாப்பு அதிகாரிகள் மெட்டல் டிடெக்டருடன் விரைந்து வந்து சோதனையிட்டனர். அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது.