திருமணம் செய்ய வற்புறுத்தி வீடு புகுந்து சிறுமியிடம் அத்துமீறல்: போக்சோவில் வாலிபர் கைது

அண்ணாநகர்: அமைந்தகரையை சேர்ந்தவர் கமலா (40), (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவரது 17 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் முத்து (30) காதலிப்பதாக கூறி, திருமணம் செய்து கொள்ளுமாறு  வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், இதை ஏற்க மறுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி கமலா வீட்டுக்கு சென்ற முத்து, அவரது மகளை திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். இதற்கு கமலா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், அங்கிருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.  இதை கமலா கண்டித்ததால் ஆத்திரமடைந்த முத்து, கமலாவை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதுகுறித்து, அமைந்தகரை போலீசில் கமலா புகார் அளித்தார். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது. இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கமலா புகார் அளித்தார்.

அதன்பேரில், மகளிர் போலீசார் நேற்று முன் தினம் இரவு முத்துவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், கமலாவின் மகளுக்கு முத்து காதல் டார்ச்சர் கொடுத்து வந்தது தெரிந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முத்துவை போலீசார் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: