மண்ணச்சநல்லூர்,ஏப்,18: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள்(பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் நேற்று மாலை தொடங்கி வரும் 21ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று இரவு 7 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வெளிக்கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த பூச்சாற்று உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெளிக்கோடை திருநாளை முன்னிட்டு இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.