திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் நேரில் ஆய்வு

திருச்செங்கோடு,ஏப்.18: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில், வாக்கு எண்ணிக்கை மையத்தில், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மெகராஜ் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு படையினரின் பதிவேடுகளில் வருகை குறித்து கையொப்பமிட்டார். நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் , நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் முன்னிலையில் உறுதியான பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டன. மேலும் அறை கதவுகளை சுற்றிலும் 3 அடி அளவிற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளின் வாயிலில் ஆயுதம் ஏந்திய இந்தோ  திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 102 பேர்  சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை சுற்றிலும் 61 தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் 30 ஆயுதப்படை வீரர்கள் என சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து நாமக்கல் மாவட்ட போலீசார் 121 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கான வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் தீயணைப்பு கருவிகள் மற்றும் தண்ணீர் நிரப்பப்பட்ட வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பாக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கெலக்டர் மெகராஜ் பார்வையிட்டார்.

Related Stories: