மா சேதாரத்தை தவிர்க்கும் தொழில்நுட்பம்

கிருஷ்ணகிரி, ஏப்.18: கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் வேளாண் ஆராய்ச்சி மையத்தில், திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் 4ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்திற்காக முகாமிட்டுள்ளனர். இவர்கள் காவேரிப்பட்டணம் அருகே பெல்ரம்பட்டி கிராமத்தில் மா அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் விவசாயிகளிடையே கூறியதாவது: அறுவடைக்கு பின்பு அதிகபடியான மாங்காய்களை வாகனங்களில் ஏற்றும்போது, காய்களில் சேதம் மற்றும் அழுகல் ஏற்படும். இதனை தவிர்க்க அறுவடைக்கு பிந்தய தொழில்நுட்பத்தை பின்பற்ற வேண்டும். வாகனங்களில் ஏற்றிச்செல்ல, 70 சதவீதம் முற்றிய காய்களை பறித்தல் வேண்டும். 55 டிகிரி சுடுநீரில், 2 நிமிடம் நனைத்து எடுத்து பின்பு சாதாரண நீரில் நனைக்க வேண்டும். வெப்பநிலைக்கு ஏற்றவாறு நேரத்தை சரிப்படுத்த வேண்டும். உதாரணமாக, 50 டிகிரிக்கு 3 நிமிடம் நனைக்க வேண்டும். சாதாரண நீரில் லிட்டருக்கு 10 கிராம் உப்பு, 2 கிராம் கார்பன்டசீம் என்ற அளவில் கரைத்துக் கொள்ள வேண்டும். அதில், மாங்காயை நனைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் காய்கள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏற்றும்போது அவை கெடாது. இத்தொழில் நுட்பம் மா ஏற்றுமதிக்கு மிகுந்த உதவியாக இருக்கும். இவ்வாறு மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

Related Stories: