நல்லம்பள்ளி, ஏப்.18: தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலம் பகுதியில், லாரி மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார். இந்த விபத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து பனியன் துணிகளை ஏற்றி வந்த லாரி, திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மேட்டூரைச் சேர்ந்த முத்தலிப் (62) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் இரட்டைப் பாலம் அருகே, நேற்று காலை 10 மணியளவில் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர், ஐதராபாத்தில் இருந்து சேலத்திற்கு கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் இடிபாடுகளில் சிக்கி கொண்டார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள், டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.