தர்மபுரி, ஏப்.18: தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு, செய்முறை தேர்வுக்கு மட்டும் வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு மே மாதம் 5ம் தொடங்குகிறது. 157 தேர்வு மையங்களில் 170 அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 9498 மாணவர்கள் மற்றும் 9742 மாணவிகள் என மொத்தம் 19,240 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களில் அறிவியல் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்றுமுன்தினம் தொடங்கியது. வரும் 23ம் தேதி வரை நடக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் செய்முறை தேர்வு நாளன்று மட்டும், சம்பந்தப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.