பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளி மர்மச்சாவு

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப்.18:  பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூனையானூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(55), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (48). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். பாஸ்கரன் மட்டும் பூனையானூர் கிராமத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் விஏஓ மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடம் வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பாஸ்கரனின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் பாஸ்கரன் சடலமாக கிடந்தார். அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: