புதுச்சேரி, ஏப். 18: புதுச்சேரியில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 715 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது செப்டம்பர் 24ம் தேதி அதிகபட்சமாக 668 பேர் தான் பாதிக்கப்பட்டு இருந்தனர். இப்போது அதை விட பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தில் 4,748 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-567, காரைக்கால்-88, ஏனாம்-35, மாகே-25 என மொத்தம் 715 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 2 பேர், காரைக்காலில் ஒருவர் என ஒரே நாளில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 705 ஆக உயர்ந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 47,108 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.