கம்பம், ஏப். 18: கம்பத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கம்பத்தில் மொத்தம் 22 ரேஷன் கடைகள் உள்ளன. உத்தமபாளையம் தாலுகா முழுவதும் பகுதி நேர ரேஷன் கடை உட்பட 22 ரேசன் கடைகளுக்கு உத்தமபாளையம் உணவு கிட்டங்கிலிருந்து ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. மாதந்தோறும் விலையில்லா அரிசி 20 கிலோ, 35 கிலோ என தமிழக அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மாதம் வழங்கப்பட்ட அரிசி மிகவும் மோசமாக, சமைப்பதற்கு தகுதி இல்லாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்ட வழங்கல் அதிகாரிகளோ கண்டும், காணாமல் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,ஏழை மக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி உத்தமபாளையம் தாலுகா முழுவதும் மிக மோசமாக உள்ளது.
கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன், சமைக்க தகுதி இல்லாத அரிசியாக உள்ளது. இந்த மாதம் வழங்கப்பட்ட அரிசியை கோழிக்கு கூட சாப்பிடாது,என்றனர்.