×

பா.பி கட்சி நிர்வாகி தற்கொலை வீடியோவால் பரபரப்பு

தேனி, ஏப். 18: பாரதீய பார்வர்டு பிளாக் கட்சி பிரமுகர் தற்கொலை செய்து கொண்டதில், தற்கொலைக்கு முன் அவர் பதிவிட்ட வீடியோ பதிவு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் முருகன் என்ற தாடி முருகன் (52). இவர் பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தவர். இவர் நேற்று முன்தினம் இவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன், இவருடைய செல்போனில் வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவில், முருகன் பேசும்போது, தனக்கு சொந்தமான நிலம் தொடர்பாக வழக்கு உள்ளது. இது சம்பந்தமாக கருப்பையா என்பவரும், அவரது மனைவி பார்வதி, உறவினர்கள் மற்றும் வனவேங்கை கட்சியை சேர்ந்த இரணியன், உலகநாதன் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி, அரசு நிலத்தகராறு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதையடுத்து, நேற்று முருகனின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை கூடம் அருகில், பாரதீய பார்வர்டு பிளாக் கட்சியினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பிரேதத்தை பெற்றனர். இச்சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : BJP ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...