மாவட்டத்தில் கூடுதல் மழை கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க, பராமரிக்க கோரிக்கை

சிவகங்கை, ஏப்.18  மாவவட்டத்தில் ஜனவரி முதல் தற்போது வரை கூடுதலாக மழை பெய்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 904.7 மி.மீ ஆகும். ஆனால் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு ஆண்டுதோறும் சீரான அளவில் மழை பெய்யவில்லை. 2008 முதல் 2019ம் ஆண்டு வரை இடைப்பட்ட 11 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2008ம் ஆண்டு 1283மி.மீ மழை பெய்ததே அதிகமான அளவாகும். 2012ம் ஆண்டு 549மி.மீ மழை பெய்ததே இந்த 9ஆண்டுகளில் மிகக்குறைந்த அளவில் பெய்த மழை அளவாகும். 2009ம் ஆண்டு 772மி.மீ, 2010ம் ஆண்டு 916மி.மீ, 2011ம் ஆண்டு 872மி.மீ, 2013ம் ஆண்டு 705மி.மீ மழை பெய்தது. 2014ம் ஆண்டு 920மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2015ம் ஆண்டில் 1097மி.மீ, 2016ம் ஆண்டு 706.5 மி.மீ மழை பெய்துள்ளது. 2017ம் ஆண்டு 976.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2018ம் ஆண்டு 924.4மி.மீ மழை, 2019ம் ஆண்டு 1006.7மி.மீ மழை பதிவாகியுள்ளது. 2020ம் ஆண்டு 1114.8மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஆண்டுதோறும் தென் மேற்கு பருவமழை 309.6மி.மீ, வடகிழக்கு பருவமழை 413.7மி.மீ சராசரியாக பெய்ய வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 218.43மி.மீ மழை பதிவாகியுள்ளது. வழக்கமாக ஜனவரி முதல் மே மாதம் வரை குறைவான அளவே மழை பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு கடந்த ஜனவரியிலும் தற்போதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் மழையளவு சராசரியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டிலிருந்து சராசரி அளவான 904 மி.மீட்டரை கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. விவசாயிகள் கூறியதாவது:சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையை நம்பி மட்டுமே விவசாய பணிகள் செய்யப்படும். ஆண்டுதோறும் தென்மேற்கு பருவ மழை சராசரியாக இருப்பதில்லை என்பதால் அதை நம்பி விவசாயம் செய்வதில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தில் நன்றாக பெய்தது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டது. இந்த ஆண்டு கோடையில் மழை பெய்வது ஆறுதலாக உள்ளது. நீர்வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது, ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து பாதிப்பு உள்ளதை ஆய்வு செய்ய வேண்டும். தொடர்ந்து கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கான வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Related Stories: