ஈரோடு, ஏப். 18: ஒப்பந்த காலம் முடிவடைந்து பல மாதங்களாகியும் சாலை செப்பனிடப்படாமல் உள்ளதாக பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் புகார் தெரிவித்துள்ளார். பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் ஈரோடு கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பெருந்துறை காவல் நிலையம் முதல் பஸ் ஸ்டாண்டு வரையிலான சாலையை புதுப்பித்து சாக்கடை கால்வாய் கட்ட ரூ.4.35 கோடிக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் கடந்தாண்டு மே மாதம் 20ம் தேதி டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்தப்படி கடந்தாண்டு நவம்பர் மாதம் 19ம் தேதிக்கு முன்பாக பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 10 சதவீத பணிகள் கூட முடிக்கப்படவில்லை. இது கோவை-ஈரோடு முக்கிய சாலையாகவும், தினசரி 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் சாலையாகவும் உள்ளது. இந்த சாலை பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாலைப்பணியை உடனடியாக முடிக்காவிட்டால் பொதுமக்கள் சாலை மறியல் செய்வதாக தெரிவித்துள்ளனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளேன். முக்கிய சாலையில் பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. எனவே பணிகளை முழுமையாக முடித்து பொதுமக்கள் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.