நீடாமங்கலம், ஏப்.17: நீடாமங்கலம் பகுதியில் ஒரேநாளில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீடாமங்கலம் பகுதியில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டு ஏற்கனவே 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் நடத்திய பரிசோதனையில் நீடாமங்கலம் பேரூராட்சி குயவர் தெருவை சேர்ந்த 2 பேருக்கும், ராயல்சிட்டியை சேர்ந்த 2 பேருக்கும், கடம்பூரை சேர்ந்த 2 பேருக்கும், குச்சுப்பாளையத்தைச் சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர், சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், தூய்மை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கை எடுத்தனர். இந்த 8 பேருடன் தொடர்பில் இருந்த மற்றும் அருகேயுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.