மன்னார்குடியிலிருந்து பொது விநியோக திட்டத்திற்காக 5,000 டன் அரிசி சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு

மன்னார்குடி, ஏப்.17: மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு பொது விநியோக திட்டத்திற்கு 5 ஆயிரம் டன் அரிசி 2 சரக்கு ரயிலில் 84 வேகன்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் இரண்டரை லட்சம் ஏக்கரில் நடைபெற்ற அறுவடையினை கொண்டு மாவட்டத்தில் 421 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கடந்த மார்ச் மாதம் வரையில் சுமார் 5 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் 40 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான கிடங்குகள் மற்றும் திறந்தவெளி கிடங்குகள் ஆகியவற்றில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவைகளிலிருந்து தினந்தோறும் சுமார் ஆயிரம் டன் அளவில் மாவட்டம் முழுவதும் உள்ள 26 நவீன அரிசி ஆலைகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அரிசியாக அரைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மீண் டும் லாரிகள் மூலம் திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் பேரளம் ரயில் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சரக்கு ரயில் வேகன்களுக்கு மாற்றப்பட்டு பொது விநியோக திட்டத்திற்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 6 மாத காலங்களில் திருவாரூரிலிருந்து சென்னை, திருவள்ளூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நெல்லை, மதுரை, கோவை, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களின் பொது விநியோக திட்டத்திற்காக லட்சக் கணக்கான டன் அரிசி தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து நேற்று 5 ஆயிரம் டன் அரிசி மூட்டைகள் 2 சரக்கு ரயிலில் 84 வேகன்களில் ஏற்றப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்காக சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணிகளில் நூற்றுக்கு மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஆய்வு பணிக்காக வந்த மன்னார்குடி ரயில் நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கினார்.

Related Stories: