க.பரமத்தி, ஏப்.17: க.பரமத்தி ஒன்றிய பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பஸ் நிறுத்தங்களில் கோடை கால நிழற்பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றிய சுற்றுப்பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த நாட்களாகவே க.பரமத்தி பகுதியில் 101 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பரமத்தியில் இருந்து பல்வேறு வேலைகளுக்காக வெளியூர்களுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
மேலும் பரமத்தி சுற்று பகுதியில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், மின்வாரிய அலுவலகம், காவல்நிலையம் என பல்வேறு அலுவலகங்களுக்கு தினமும் ஏராளமானோர் வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். இவர்கள் வேலை முடிந்து மதிய நேரத்தில் ஊர் திரும்ப பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கின்றனர். மேலும் பஸ் வரும் வரை வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர். இதில் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இது போல ஒன்றிய பகுதியில் சில இடங்களில் நிழற்குடைகள் இல்லாத பஸ் நிறுத்தங்களில் குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் நலன் கருதி கோடை கால நிழற்பந்தல் அமைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.