திண்டுக்கல், ஏப். 17: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.31 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக அரசு அபராதம் விதிப்பு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் வாகனங்களில் செல்லும் பெரும்பாலானோர் முககவசம் அணியாமலே செல்கின்றனர். அவர்களிடம் சுகாதார துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை 15,600 பேர் முககவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இதில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 3,300 பேரும், பழநியில் 2,800 பேரும், திண்டுக்கல்லில் 2200 பேரும், ஒட்டன்சத்திரத்தில் 2,000 பேரும் சிக்கினர். இவர்களிடம் தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ. 31 லட்சத்து 20 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகள், வணிக வளாகங்கள் என மொத்தம் 180 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.