திருப்பூர், ஏப். 17: டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் அதிகரித்துள்ளதால் காய்ச்சல் தடுப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. திருப்பூரில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெங்கு பாதிப்பு மற்றும் அறிகுறி காணப்படும் வார்டுகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேநேரம், கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து, கொசு ஒழிப்புப் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காங்கயம் ரோடு அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய டயர்களில் மழை நீர் தேங்கியுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.