திருப்பூர், ஏப். 17: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 214 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 பயிலும் 5,946 மாணவர்கள், 7,081 மாணவிகள் என மொத்தம் 13,027 பேர் செய்முறைத் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில், செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பள்ளி வாரியாக தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இதன்படி இயற்பியல், வேதியியல், கணிணி அறிவியில், தொழில்கல்வி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான செய்முறைத் தேர்வுகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நேற்று நடைபெற்றது. இதில், மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வகங்களில் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுதினர். புற தேர்வு அலுவலர்கள், அகதேர்வு அலுவலர்கள், முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்கள் அடங்கிய தேர்வுகுழுவினர் கண்காணித்தனர்.