ஈரோடு, ஏப். 17: ஈரோடு மாவட்டத்தில் 2வது நாளாக நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் ஈரோட்டில் 30 வீடுகளில் தண்ணீர் புகுந்ததையடுத்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், 2வது நாளாக நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தின் தென்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஈரோட்டில் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், ஸ்டோனிபிரிட்ஜ் பாலம், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரங்களில் இருந்த 30 வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். தண்ணீர் புகுந்ததில் 4 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர். இதே போல ஈரோடு வஉசி மைதானத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கனி மார்க்கெட் வளாகத்தில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நின்றதால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியுற்றனர். மாவட்டத்தில் பெய்த மழை அளவு நிலவரம் (மில்லி மீட்டரில்): ஈரோடு 30 மி.மீ, பெருந்துறை 49, கோபி, கொடுமுடி தலா 4, சத்தி, கொடிவேரி தலா 7, கவுந்தப்பாடி 5, நம்பியூர் 12, சென்னிமலை 20, மொடக்குறிச்சி 32, குண்டேரிப்பள்ளம் 41, வரட்டுப்பள்ளம் 14.4 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 13.7 மில்லி மீட்டர் ஆகும்.