பெரம்பூர்: வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தேவி (38). இவரது கணவர் செல்வம் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தேவி, சவுகார்பட்டையில் உள்ள மிளகாய் மண்டியில் வேலை செய்யும்போது, அங்கு பணிபுரியும் கன்னிகாபுரம் எம்.எஸ்.மூர்த்தி நகரை சேர்ந்த உதயகுமாருடன் (25) தேவிக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் தேவியின் வீட்டிற்கு உதயகுமார் வந்துள்ளார். அப்போது, இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த தேவியின் கணவர் செல்வம், மனைவியை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை உதயகுமார் தேவி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தேவி இனிமேல் வீட்டிற்கு வர வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த உதயகுமார் தேவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வீட்டிலிருந்த காய் வெட்டும் கத்தியை எடுத்து, தேவியை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில், உதயகுமாரை போலீசார் கைது செய்தனர்.