×

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

கரூர், ஏப். 16: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசு முதன்மை செயலரும், கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலருமான விஜயராஜ்குமார் தலைமையில், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்டத்தில் கொரோனா தொற்றுள்ளவர்களை அனுமதிக்கும் வகையில் எத்தனை படுக்கைகள் தயாராக உள்ளது. எத்தனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பு மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசிகள் எத்தனை பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதை கடந்த நபர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பன போன்ற விபரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டன. பின்னர், கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் தெரிவித்துள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய் கட்டுப்பாடு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள்.

கரூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை கணக்கிட்டு அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதியோர் ஒய்வூதியம் பெறும் நபர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதி செய்யப்பட வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என பிரத்யேகமாக தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும். பஸ் நிலையங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பெரிய வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள், உழவர்சந்தைகள், ஷாப்பில் மால்கள், ஜவுளி கடைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் முகக்கவசத்துடன் உள்ளார்களா? எனவும், தனிமனித சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா எனவும், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதே போல், கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் வீடுகளை சுற்றி கிருமிநாசினி தெளிக்க வேண்டும். தொற்றுள்ள நபர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும், தொற்றுள்ள நபர் வசித்து வந்த பகுதியில் உள்ள வயதானவர்கள், சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், எஸ்.பி., சசாங்சாய், டிஆர்ஓ லியாகத், ஆர்டிஓ பாலசுப்ரமணியன் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு