தரங்கம்பாடி, ஏப்.16: மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் அலை மோதுகின்றனர்.கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், இதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ஆக்கூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் தடுப்பூசி போட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி 28 நாள் கழித்து போடப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் இரண்டாம் தடுப்பூசியை 6 வாரம் கழித்து போடுவது கூடுதல் பலனை கொடுக்கும் என்பதை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து முதல் தடுப்பூசி போட்டவர்கள் இரண்டாம் தடுப்பூசி போட வரும் போது இரண்டு வாரம் கழித்து போட வேண்டும் என்று கூறி அனுப்பி விடுகின்றனர்.
ஆரம்ப கட்டத்தில் தடுப்பூசி போட பயந்த பொதுமக்கள் இப்பொழுது தடுப்பூசி போட குவிந்து வருகின்றனர். இதனால் தடுப்பூசி போடும் மையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.