பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயற்சி தொடரும் சம்பவத்தால் மக்கள் பீதி

வலங்கைமான், ஏப்.16: வலங்கைமானில் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலங்கைமான் மரவெட்டி தெருவை சேர்ந்தவர் ஜெயபால் மனைவி சாந்தி(45). இவர் தமிழ் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடுநாராசம் ரோடு வழியே வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ஒரே பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் சாந்தியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி கூச்சலிட்டதையடுத்து அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். இதனை கண்ட மர்ம நபர்கள் பைக்கில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து சாந்தியின் கணவர் ஜெயபால் வலங்கைமான் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.வலங்கைமான் பகுதியில் கடந்த சில நாட்களாக செயின் மற்றும் மொபைல் போன் பறிப்பு சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: